சனி, 6 ஏப்ரல், 2013

மகிழ்ச்சிக்கு வழி!

இந்த உலகில் நாம் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லாத விஷயம்.

அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

புற உலகில் நமது வாழ்க்கைப் பிறரைச் சார்ந்திருப்பது போலவே, அகவாழ்விலும் நமது வாழ்க்கை பிறரைச் சார்ந்தே இருக்கிறது.

இதைப் புரிந்துகொள்ள உதவுவதுதான். இந்த காதை.

முன்னொரு காலத்தில் ராஜ்யவர்த்னன் என்ற ஒர் அரசர் இருந்தார். அவர் ஏழாயிரம் ஆண்டுகள் தன்னுடைய நாட்டை மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்.

(ஏழாயிரம் ஆண்டுகள் எப்படி ஒருவர் உயிருடன் இருந்திருக்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்குத் தோன்றலாம். இது புராணக்கதை. கதைகளில் சொல்லப்படும் பல நிகழ்ச்சிகள் இந்தக் காலத்துக்குப் பொருந்தாதுதான். ‘ஏழாயிரம் ஆண்டுகள்’ என்றால் நீண்ட காலம் என்று பொருள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், புராணக் கதைகள் மூலம் சொல்லப்படும் கருத்தைத்தான் நாம் முக்கியமாகவும் சாரமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.)

அரசாட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றதால் மக்களுக்கு அரசன்மீது மிகுந்த மரியாதை இருந்தது.

ஒரு நாள்—
  
     ராணி, அரசனுக்குத் தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அரசியின் கண் கலங்கியது!

இதைப் பார்த்த அரசர், அரசியிடம் அவள் கலங்குவதற்குரிய காரணத்தை விசாரித்தார்.

“உங்கள் தலையில் ஒரு முடி நரைத்திருக்கிறது! அப்படியென்றால் உங்களுக்கு வயதாகிவிட்டது என்றுதானே அர்த்தம்? அதனால்தான் நான் கண் கலங்கினேன்!” என்று அரசி வருத்தத்துடன் கூறினாள்.

“இதற்குப்போய் யாராவது அழுவார்களா? இது காலன் எனக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை! எனவே நான் உடனே காட்டிற்குச் சென்று எஞ்சியுள்ள காலத்தை தவத்தில் கழிக்க வேண்டும்” என்றார் அரசர்.

“அப்படியானால் நானும் உங்களுடன் வருவேன்” என்றாள் அரசி.

அரசனும் அரசியும் காட்டிற்குப் போய்விட்டால் அரசாங்கம் என்ன ஆவது?

பொதுமக்கள் பார்த்தார்கள். அவர்கள் அரசனிடம் சென்று, “நீங்கள் இருவருமே காட்டுக்கு போக வேண்டாம். கொஞ்சம்  பொறுங்கள். நாங்கள் சிறிது காலம் கழித்து உங்களிடம் வந்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று கூறுகிறோம்” என்று சொல்லிவிட்டு, வெகு தொலைவில் இருந்த சூரியனின் ஆலயத்திற்குச் சென்று தவம் செய்ய ஆரம்பித்தார்கள்.

மூன்று மாதம் கழித்து.

சூரிய பகவான் அவர்களுக்குக் காட்சியளித்து, “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

“எங்கள்  அரசர் இன்னும் 10,000 ஆண்டுகள் எந்த நோய் நொடியும் இல்லாமல் இளமையோடு இருந்து எங்கள் நாட்டை நன்றாக ஆட்சி செய்ய வேண்டும்” என்று மக்கள் வரம் கேட்டார்கள்.

சூரிய மகவானும் அவர்கள் விரும்பிய படியே வரம் கொடுத்து மறைந்தார்.

அரசனுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. அவர் சந்தோஷப்படுவதற்குப் பதிலாக வருத்தப்பட்டார்.

இதைக் கண்ட அரசி, “ இந்தச் செய்தியினால் மகிழ்ச்சியடைவதற்குப் பதில் வருத்தப்படுகிறீர்களே, ஏன்?” என்று வினவினாள்.

“இந்த வரத்தினால் நான் எப்படி சந்தோஷப்பட முடியும்? நான் பத்தாயிரம் வருடங்கள் உயிரோடு இருக்கலாம். ஆனால் நீயும், இந்த வரத்தைப் பெற்றுத் தந்த நம்முடைய நாட்டு மக்களும் உயிரோடு இருக்க மாட்டீர்களே! என்னுடைய ராணியாகிய நீயும், என் அன்பிற்குரிய  இந்த ஜனங்களும் இல்லாமல் நான் மட்டும் எப்படி பத்தாயிரம் ஆண்டுகள் சந்தோஷமாக இருக்க முடியும்?” என்றார்  அரசர்.

பின்பு அரசனும் அரசியும், அதே சூரியனின் ஆலயத்திற்குச் சென்று தவம் புரிந்தார்கள்.

சூரிய பகவான் அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து அவர்களுக்கு தரிசனம் தந்தார்.

அப்போது அரசனும் அரசியும், “நாட்டில்  இப்போதிருக்கும் எல்லோருமே பத்தாயிரம் ஆண்டுகள் சீரும் சிறப்புமாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்“ என்ற வரத்தை சூரிய பகவானிடம் வேண்டிப் பெற்றார்கள்.

இந்தக் கதை மார்க்கண்டேய புராணத்தில் மார்க்கண்டேயர் சொல்வதாக அமைந்துள்ளது.

கதையின் நீதி:  நம்முடைய மகிழ்ச்சியில் மற்றவர்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது; மற்றவர்களின் மகிழ்ச்சியில் நம்முடைய மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. இதைத்தான் இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.



1 கருத்து: