வியாழன், 4 ஏப்ரல், 2013

பாசம்



பாபு பள்ளி முடித்து வெளியே வந்தான். பாட்டி ஒருத்தி பள்ளி வாசலில் மிட்டாய் விற்பாள். பாபுவுக்கு அந்த பாட்டியை மிகவும் பிடிக்கும்.

தினமும் சாயங்காலாம் மிட்டாய் வாங்கித் தின்று கொண்டு பாட்டியுடன் பேசிக் கொண்டிருப்பான். பிறகுதான் வீடு திரும்புவான். பாட்டியும் பாபுவுடன் அன்போடு பழகி வந்தாள்.

ஒருநாள் பாபு பள்ளிக்கு வரவில்லை. பாபுவை எதிர்பார்த்த பாட்டி ஏமாந்து போனாள்.

மறுநாள் பாபுவைக் கண்ட பாட்டி மனம் மகிழ்ந்தாள். பாபு பாட்டிக்கு இனிப்பு வழங்கினான்.

‘இனிப்பு எதற்கு?’ பாட்டி கேட்டாள். ‘நேற்று எனக்கு பிறந்தநாள். அதனால்தான் பள்ளிக்கு கூட வரவில்லை’ என்று கூறி இனிப்பை பாட்டிக்கு ஊட்டிவிட்டான் பாபு.

பாட்டி கண்ணில் கண்ணீர்  வழிந்தது. இதைக்கண்ட பாபு, ‘ஏன் பாட்டி அழறீங்க’ என்று கேட்டான்.

அதற்கு பாட்டி ‘நேற்று என் பேரனுக்கும் பிறந்தநாள். அவன் நினைவு வந்தது’ என்று கூறினார்.

‘உங்கள் பேரன் எங்கே இருக்கிறான்? நேற்று உங்களை பார்க்க வந்தானா?’ பாபு கேட்டான்.

‘இல்லை பாபு, என் பேரன் மீது நான் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். என் மருமகளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதனால் என் பேரனை பிரிந்து வாழும் சூழ்நிலை வந்துவிட்டது’ என்றார்.

‘உங்கள் பேரன் பெயர் என்ன? உங்கள் மறுமகள் எங்கு இருக்கிறாள்?’ என்று பாபு கேட்டான்.

“என் பேரன் பெயர் துரை. என் மருமகள் பெயர்  சீதா, பக்கத்து ஊரில் தான் இருக்கிறாள். இருந்தலும் நான் என் பேரனையோ, மகன்-மருமகளையோ பார்ப்பதில்லை’ என்றாள் பாட்டி.

பாட்டி தன் பெயரையும், அம்மாவின் பெயரையும் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனான் பாபு.

துரைபாபு என்பது அவன் பெயர். ‘துரை, துரை’ என்று பாட்டி செல்லமாக அழைப்பாள். அதனால் அந்த பெயர் பிடிக்காத அவளது மருமகள் துரையென்று கூப்பிடாமல் பாபு என்று கூப்பிட்டு பழக்கப் படுத்தினாள்.

கைக்குழந்தையாக இருந்தபோதே பாட்டியை வெளியே அனுப்பிவிட்டதால் பாட்டிக்கும் தன் பேரனை அடையாளம் தெரியவில்லை.

‘தன் மீது பாசமாக இருக்கும் அம்மா, பாட்டி மீது மட்டும் ஏன் வெறுப்பு காட்டுகிறாள். அம்மாவுக்கு சரியான பாடம்புகட்ட வேண்டும்’ என்று விரும்பினான் பாபு.

மறுநாள் பள்ளிக்குப் போன பாபு, ‘பாட்டி நான் இன்று உங்களுடன் தங்குகிறேன். எங்கள் வீட்டில் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்’ என்று கூறி தங்கிக் கொண்டான்.

பள்ளியில் இருந்து திரும்பி வராத பாபுவை அவனது பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடினார்கள். போலீசிலும்  புகார் செய்தனர். அவனது அம்மா அன்று சாப்பிடவே இல்லை.

மறுநாள் பாட்டியின் வீட்டிக்கு சென்ற பாபுவைக் கண்ட சீதா, கண்ணீருடன் பாபுவை கட்டித்தழுவி முத்தமிட்டாள்.

‘உன்னைக் காணாமல் என் உயிரே போய்விட்டது’ என்று கதறினாள் சீதா.

‘உன்னைப் போல்த்தான் அம்மா, பாட்டியும் அங்க மகனையும், பேரனையும் பிரிந்து தவிச்சிருப்பாங்க. ஏம்மா அவங்களை தனியே அனுப்பிச்சீங்க’ என்றான் பாபு.

‘பிரிவின் வலியைப் புரிஞ்சுக்கிட்டேன் பாபு. இனி பாட்டி நம்முடனே இருக்கட்டும்’ என்றால் சீதா தன் தவறை புரிந்து கொண்டவளாக. தன் மாமியார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள் சீதா.


இப்போது அனைவரும் ஒன்றாக  வாழ்ந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக