வியாழன், 4 ஏப்ரல், 2013

காக்கையின் நட்பு


அர்சனாவுக்கு வயது ஒன்றரை, அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு, சோறூட்ட முற்றத்திற்கு வந்தாள் அவளது அம்மா சாந்தி.

சோற்றுடன் வந்ததும் முற்றத்தில் நின்ற மரத்தில் ஏராளமான காகங்கள் கூடிவிட்டன.

காக்காவைக் காட்டிக் கொண்டே மகளுக்கு சோறு ஊட்டுவாள் சாந்தி. ஆனால் காக்காவுக்கு சோறு போடுவதில்லை.

அப்போது குக்கர் விசில் சத்தம் கேட்கவே, அர்ச்சனாவை கிழே இறக்கிவிட்டு, வீட்டிற்குள் ஓடினாள் சாந்தி.

அர்ச்சனாவின் அழகுக் கண்கள் சிரிக்கும், தளிர்நடையால் அவள் நடக்கும் அழகோ தனி.

அம்மா உள்ளே போனதும், அர்ச்சனா கண்ணால் சிரித்தபடி தளிர்நடை நடந்தபடி, சோற்றை அள்ளி காக்காவை நோக்கி நீட்டினாள். காகங்கள் அவளை நெருங்கி வர, “காக்கா இந்த... காக்கா இந்தா...” என்று சோறு போட்டாள். 

உள்ளே சென்ற சாந்தி திரும்பி வர, கையால் ஒரு அடி அடித்தாள் அர்ச்சனாவை...

“அரிசி விக்கிற விலைக்கு இதுகளுக்கு சமைச்சி சோறு போடணுமாக்கும். உன் சாப்பாட்டை காக்காவுக்கு தியானம் பண்றியா?”
என்று முணுமுணுத்தபடியே கையை ஓங்கி காக்கைகளை விரட்டினாள் சாந்தி.

அர்ச்சனாவுக்கு நாய், பூனை, காக்கா, எறும்பு எல்லோருமே நண்பர்கள்தான். கையில் என்ன பண்டம் வைத்திருந்தாலும் போட்டு விடுவாள்.

அதட்டிக் கொண்டே சோறூட்டிய சாந்தி, விளையாட்டுச் சாமான்களை அர்சனாவிடம் கொடுத்துவிட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்க வீட்டுற்குள் சென்றுவிட்டாள்.

அர்ச்சனா முற்றத்தில் விளையாட்டு சாமான்களை பரப்பி விளையாடிக் கொண்டிருந்தாள்.

திடீரென அர்ச்சனாவின் கூச்சலும், காக்காக்கள் கத்தும் சத்தமும் கேட்டு வெளியே ஓடி வந்தாள் சாந்தி.

அங்கே குரங்கு ஒன்றை காக்கை கூட்டம் விரட்டி விரட்டி கொத்திக் கொண்டு இருந்தது.

“அம்மா என் டப்பா...” என்று அழுத அர்ச்சனா, அம்மாவை கட்டிக் கொண்டாள்.

ஒரு நொடியில் நடந்ததை புரிந்து கொண்டாள் சாந்தி.

தன் மகள் விளையாடிய பாத்திரத்தில் ‘சாப்பிட ஏதேனும் இருக்குமோ?’ என எண்ணி குரங்கு பாத்திரத்தை தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறது. இதைப் பார்த்த காகங்கள் குரங்கினை விரட்டி கொத்துகின்றன என்பதைப் புரிந்து கொண்டாள்.


மகள் மற்ற ஜீவன்களுடன் நட்பாக இருந்தது, அவளுக்கு ஒரு இடையூறு நேர்ந்தபோது உதவியாக அமைந்ததை எண்ணி ஆச்சிரியப்பட்டாள் சாந்தி.

அன்று முதல் மகளுக்கு சோறூட்ட வரும்  சாந்தி முதலில் காகங்களை ‘க்கா...க்கா...’ எனக் கூப்பிட்டு சாதம் வைத்த பின்னரே மகளுக்கு உணவூட்டினாள்! 

1 கருத்து: