செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பொறுமை வெற்றி தருமா?

மாதேஸ்வரன் மலையச் சுற்றி அடர்ந்த காடுகள் இருக்கின்றன. அடுக்கு அடுக்காக மலைகளும் பள்ளத்தாக்குகளும் அவற்றில் அடர்ந்த காடுகளும் உள்ளன. மிகவும் உள்ளே தள்ளி யாரும் நுழைய முடியாத ஒரு பெரிய காடு உள்ளது. சிங்கம் முதல் முயல் வரை எல்லாவிதமான காட்டு விலங்குகளும்  அங்கு உள்ளன.

அந்தக் காட்டில் சிங்கராஜா என்ற ஒரே ஒரு சிங்கம் மட்டும் இருந்தது. அது எல்லா விலங்குகளுக்கும் அரசனாக இருந்தது. வீணாக எந்த விலங்கையும் துன்பறுத்தாது. காட்டில் எந்தவித சண்டையும் குழப்பமும் இல்லாமல் பார்த்துக் கொண்டது. தான் “காட்டுக்கே ராஜா” என்ற தலைக்கனம் அதற்கு இல்லை. மாறாக, சிங்க ராஜா எல்லா விலங்குகளையும் நேசித்தது. சிறியமுயல் முதல் பெரிய யானை வரை எல்லா விலங்குகளுக்கும் உரிய மதிப்பளித்து நடத்தியது. அதனால் எல்லா விலங்குகளுக்கும் சிங்கராஜாவை மிகவும் பிடிக்கும்.
அவையும் சிங்கராஜாவை மிகுந்த மரியாதையுடன் நடத்தின. நீதியைத் தவிர்த்து எந்த அநியாயத் தீர்ப்பும் சொல்லாது.

காட்டு மரங்களில் வாழ்பவை குரங்குகள். அவை கிளைக்குக் கிளை தாவி எல்லா இடங்களிலும் ஒடித்திரியும். எனவே சில சமயங்களில் மற்ற விலங்குகளுடன் வீணாகச் சண்டைக்குப் போகும். இவ்வாறு தேவையில்லாமல் மற்ற விலங்குகளை வம்புக்கு இழுப்பதை சிங்கராஜா கண்டித்து வந்தது. ஆனால் குரங்குகள்,  “நாங்கள்தான் மரங்களில் தாவியும் நிலத்தில் ஓடியும் வாழக்கூடியவர்கள். மற்ற விலங்குகளை விட எங்களுக்கு ஆற்றல் அதிகம்” என்று தற்பெருமையாகப் பேசிக்கொள்ளும்.

குரங்குகள் சிங்கராஜாவை மதிப்பதில்லை. மற்ற விலங்குகளிடமும் எப்போதும் ஏதாவது வம்புச் சண்டைதான். குறும்புகள் செய்துகொண்டே இருக்கும். எனவே நாளடைவில் மற்ற விலங்குகளும் குரங்குகளைக் கண்டுகொள்வதில்லை.

ஒருநாள் சிங்கராஜா காட்டைச் சுற்றி வந்து இருந்தது. எதையோ எதையோ எதிர்பார்த்து நடந்துகொண்டிருந்த சிங்கம் ஒரு கிணரு போன்ற குழியில் விழுந்துவிட்டது. சற்று ஆழமான குழிதான். குழியிலிருந்து எழும்பி வெளியே தாவ முயற்ச்சித்தது. ஆழம் அதிகமானதால் வெளியே வர முடியவில்லை.

தான் இப்படி விழுந்து கிடப்பதை பெரிய அவமானமாகக் கருதியது சிங்கம். மற்ற விலங்குகள் பார்க்க நேரிட்டால் என்ன ஆகும்? எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தும் ஒரு வழியும் கிடைக்க வில்லை. எப்படியும் ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று காத்திருந்தது. நேரமாக ஆக, வேறு வழியின்றி “கர்...கர்...” என்று கர்ஜித்து மற்ற விலங்குகளை உதவிக்கு அழைத்தது.

சிங்கராஜாவின் குரல் கேட்டு அங்கு வந்தவை குரங்குகள்தாம். அவைதான் அருகிலிருந்த மரத்தில் தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. சிங்கராஜா குழியில் விழுந்து கிடப்பதைப் பார்த்த குரங்குகள்  அதை ஏளனம் செய்தன.

“என்ன சிங்கராஜா, என்ன ஆச்சு உங்க சக்தியெல்லாம்? பாவம், குழியில மாட்டிக்கிட்டீங்க!” குரங்குகள் குறும்பு செய்து சிரிக்க ஆரம்பித்தன.

தகுதியால் சிறியவர்கள் மரியாதையின்றி பெரியவர்களைக் கேலி செய்து சிரிப்பது போல அந்தக் குரங்குகள் சிங்கராஜாவை மிகவும் கேலி செய்யத் தொடங்கின.

அது மட்டுமின்றி அந்தக் குரங்குகள், பாவம் அந்தச் சிங்கத்தின் மீது கல்லொறியத் தொடங்கின. அது அவர்களுக்கு வேடிக்கைக் குறும்பாக மாறிவிட்டது. சிறிதும் பொரிதுமாக கற்களால் அவை தாக்கிக் கொண்டேயிருந்தன. அந்த இடத்தில் கற்கள் தீர்ந்து போன பிறகும்கூட தூரத்திலிருந்து கற்களைப் பொறுக்கி வந்து தாக்கின.

அடுத்தவர் துன்பம் அவற்றுக்கு விளையாட்டு. சிங்கம் வேதனைப்படுவது அவற்றுக்கு இன்பமாக இருந்தது. அதை ஒரு கேலியான விளையாட்டாக அவை கருதின. சிங்கம் பொறுமையாக இருந்தது. கற்கள் தன்னைத் தாக்காது தற்காத்துக் கொண்டேயிருந்தது. அதன் அடர்ந்த உரோமம் கல்லடியிலிருந்து காத்தது. எப்படியும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் பொறுமையைக் கடைப்பிடித்தது.

“பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பது பழமொழி அல்லவா? நம்பிக்கையும் பொறுமையும் எப்போதும் வீண் போகாது என்று அதற்குத் தெரியும்.

குரங்குகள் குழிக்குள் எட்டிப் பார்பதும் சிரிப்பதும் கற்களால் தாக்குவதுமாக தங்கள் ஈன விளையாட்டைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. சிங்கராஜா தளர்ந்து வீழ்வதைக் காண்பதே அவற்றின் லட்சியம். நீண்ட நேரம் இது தொடர்ந்தது.

“திடீர்” என்று ஒரே தாவலில் சிங்கம் குழியை விட்டு வெளியே பாய்ந்தது. குரங்குகள் நடுவில் சிங்கம் சீறிப் பாய்ந்து வந்ததைக் கண்ட குரங்குகள் வெலவெலத்துப் போயின.

சிங்கராஜா தங்களை பழிக்குப் பழி வாங்கிவிடும் என்று அவை பயந்து நடுங்கிக் கொண்டு நின்றன.

“சிங்கராஜா.... எங்களை மன்னித்து விடுங்கள். சிறியோர் நாங்கள் அறிவில்லாமல் பெரும் பிழை செய்துவிட்டோம்” எல்லா குரங்குகளும் கெஞ்சத் தொடங்கின.

“உங்களை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நீங்கள் எனக்குத் தந்த உபத்திரவம்தான் எனக்கு உதவியாக மாறியது.”

குரங்குகள் ஒன்றும் புரியாமல் விழித்தன. “நாம் சிங்கத்தைத் துன்புறுத்தியது எப்படி அதற்கு உதவியாக மாறியது?” என்று குழம்பி நின்றன.

“நீங்கள் என்னைத் துன்புறுத்து வதற்காக எறிந்த கற்கள்தான் எனது தப்பிக்கும் முயற்சிக்குப் படிக்கட்டுகளாக அமைந்தன. எந்தத் தோல்வியும் முடிவு அல்ல. அவை வெற்றியின் படிக்கட்டுகள்தான்.”

ஆம் பொறுமை வெற்றி தரும். குரங்குகள் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு சென்றன. அவற்றின் சிறுமைப் புத்தி மாறியது. சிங்கம் தன் பொறுமையின் வெற்றியை கம்பீரமாகப் பறைசாற்றிக் கொண்டே கர்ஜனை செய்து நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக