வியாழன், 11 ஏப்ரல், 2013

கதைகளின் பொது நோக்கங்கள்

1.    மகிழ்ச்சியூட்டல்

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டுதலே கதை கூறுதலின் தலையாய நோக்கமாகும். குழந்தைகள் மிகவும் விரும்பும் கதைகளை வலைதளத்தில் இருந்து எடுத்து ஆசிரியர் அல்லது பெற்றோர்கள் கூறச் செய்து பிள்ளைகளை பகிழ்ச்சியூட்டலாம். வேடிக்கை கதைகளையும், நகைச்சுவைக் கதைகளையும் தேர்ந்தெடுத்துக் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி யூட்டுதல்வேண்டும்.

2.    அன்பை வளர்த்தல்


   கதை கேட்பதில் உள்ள ஆர்வத்தால் கதை கூறுபவர்பால்
   குழந்தைகளுக்கு அன்பு ஏற்படும். மாணாக்கர் அன்போடு
   பழகுவதால், ஆசிரியருக்கு அவர்கள் மீது அன்பு ஏற்படும்.
   குழந்தைகள் அன்போடு பழகுவதால் வீட்டில் அன்பு   மலரும். இவ்வாறு ஒருவருக்கொருவரிடையே அன்பை வளர்த்தல் கதைகூறுபவர்களின் மற்றும் கதை வெளியிடுபவர்களின் நோக்கமாகும்.

3.    உணர்ச்சி வெளியீடு

மாணாக்கரிடத்து உணர்ச்சி வெளியீட்டினைத் தோற்றுவிக்கவும் கதைகள் பயன்படும். ஆசிரியர் கதை கூறும்போது. அவை உண்மையாக நிகழ்ந்தன போன்று ஒர் உணர்ச்சியைத் தூண்டுதல் வேண்டும். இன்பம், துன்பம், மகிழ்ச்சி, அச்சம், கோபம் போன்ற உணர்ச்சிகள் பொங்குமாறு கதைகள் அமைந்தால் மாணாக்கர் உணர்ச்சி வயப்படுவர். கருத்துகள் நிலைத்து நிற்கும், எனவே உணர்ச்சிகளைத் தூண்டி வெளியிடச் செய்தல் கதை கூறுதலின் நோக்கங்களுள் ஒன்றாகும்.

4.    கவனிக்கும் திறன்

மாணவர்களிடம் கவனிக்கும் திறனை வளர்ப்பது கல்வி கற்பித்தலின் நோக்கங்களுள் ஒன்று. அதற்குக் கதைகள் பெரிதும் உதவுவனவாகும். கதை கூறும்பொழுது சொற்களைச் செவி கேட்க, மனமும் ஒன்றுகின்ற நிலையை நாம் காணலாம். மனமும் கருத்தும் ஒன்றுபட்டுக் கதைப் போக்கில்  ஈடுபடுவதால் கவனிக்கும் திறன் உண்டாகிறது. ஆசிரியர் அல்லது குழந்தைகளின் உறவினர்கள் கதைகள் கூறும்போது அனைத்துச் சொற்களையும் குழந்தைகள் சிறிதுவிடாது கேட்கின்றனர். கற்றுக் கொள்கின்றனர். இதன் காரணமாய்க் கவனிக்கும் திறன் மாணாக்கர்க்கு அதிகமாக உண்டாகின்றது. இவ்வாறு கவனிக்கும் திறன் வளர்ப்பது கதைகளின் தலைசிறந்த பயன்பாடுகளின் ஒன்று.

5.    பள்ளியின்பால் பற்று

கதை வகுப்புகள் அமைக்கப்பட்டிருப்பதால் மாணாக்கர் விருப்பத்தோடு பள்ளிக்கு வருவர். பள்ளியின்பால் பற்று ஏற்படுகிறது. இது பொது நோக்கங்களுள் ஒன்றாகும்.

6.    நற்குணப் பயிற்சி

சிறந்த நல்லொழுக்கமுடைய கதை மாந்தர்களைக் கேட்டுத் தாமும் அவ்வாறு நற்குணம் உடையவராய் விளங்க வேண்டும் என்னும் ஆர்வம் இயல்பாய் எழும். அரிச்சந்திரன் கதையைக் கேட்டுத் தாமும் உண்மையே பேச வேண்டும் என்ற என்னம் எழும். நள தமயந்தியின் கதைகளை கேட்டு நாமும் அவ்வாறு ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்ற என்னம் உண்டாகும்.

7.    வாய்மொழிப் பயிற்சி

கதைகளைக் குழந்தைகளே கூறும்பொழுது கதையின் வரும் தொடர்களைப் பிழையின்றிக் கூறுதல் கதையை முறையாகக் கூறுதல் ஆகியவற்றின் மூலம் வாய்மொழிப் பயிற்சி பெறுகின்றனர்.

சிறப்பு நோக்கம்


ஒவ்வொரு கதைக்கும், சிறப்பு நோக்கம் அக்கதைக்கு ஏற்ப அமையும் எனினும் கீழ்க்கண்டவற்றைச் சிறப்பு நோக்கங்களாகக் கொண்ட கதைகளைப் பள்ளி மாணவர்களுக்காக தேர்ந்தெடுத்தல் நன்று.

1.    அறிவு – பண்பாட்டு வளர்ச்சி

கதைகளில் வரும் செய்திகளும், கதை மாந்தரால் கூறப்படும் கருத்துகளும் மாணாக்கரது அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவனவாம். மற்றும் கதை மாந்தரது பழக்க வழக்கங்களையும், அவர்கள் ஒருவரோடு ஒருவர்  பழகும் பான்மையினையும் படிக்கும்பொழுது மாணாக்கர் பயன்பாடுகளை அறிகின்றனர். அது அவர்கள் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். பல துறை அறிவினை வழங்குகின்ற கதைகளையும், நல்ல பண்பாட்டுடன் விளங்கும் கதை மாந்தர் கதைகளையும் இணையத்தில் இருந்தோ அல்லது கதைகள் மொழிப்பாடத்தில் இருந்தோ தேர்ந்தெடுத்து மாணாக்கருக்குக் கூறுதல் வேண்டும்.

2.    இறையுணர்வு ஊட்டல்

இறைவனை வழிபட்டுச் சிறந்த அடியாளர்களைப் பற்றிக் கூறும் பக்திக் கதைகள் இறையுணர்வினையூட்டும். எம்மதமும் சம்மதமே என்றும், இறைவன் ஒருவனே என்றும் கருத்துகள் அமையுமாறு கதைகள் கூறப்படுதல் நன்று. ஏனெனில் வகுப்பில் பல சமயத்தைச் சார்ந்தவர்  இருப்பர், சமுதாயத்தில் சிறுவர்கள் பல சமயத்து மக்களின் குழந்தைகளோடு பழகுவார்கள் ஆகையால் தனிப்பான்மை ஏற்படாத வன்னம் அனைத்து மதச் சார்பாகவும் ஒவ்வொரு கதை கூறி மாணவர்களுக்கு இறையுணர்வினை ஊட்டலாம். மற்றும் ஒழுக்க நெறியில் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டு செய்து உயர்வு எய்திய சான்றோரைப் பற்றிய கதைகளைக் கூறுதலும் நலம் பயக்கும்.

3.    படைப்பாற்றலை வளர்த்தல்

கதைகளைக் கேட்கும் மாணக்கர் தாமே கதை புனையும் விருப்பம் கொள்வர். ஆசிரியர் தொடங்க நிலையில் சிறுகதையைப் பாதியளவு கூறி மாணாக்கரை முடிக்கச் செய்யலாம். பின்னர், இரண்டொரு தொடர்கள் குறித்து கதையை அவர்களே எழுதச் செய்யலாம். இவ்வாறு மாணாக்கரது படைப்பாற்றலைக் கதைகள் எழுதச் செய்வதன்மூலம் வளர்க்கலாம்.

4.    நினைவாற்றலும் நடிப்பாற்றலும்

மாணக்கரது நினைவாற்றலை வளர்த்தலை ஒரு சிறப்பு நோக்கமாகக் கொண்டு ஆசிரியர் கதைகளைக் கூறுதல் வேண்டும். முதலில் வகுப்பில் கூறிய கதைகளை மீண்டும் சொல்லுதல் வேண்டும். இடையில் நிறுத்தி மாணாக்கரைத் தொடர்ந்து கூறச் செய்யலாம். இரண்டு அல்லது மூன்று முறை கதைகளைக் கூறி மாணாக்கரைக் திரும்பக் கூறச் செய்தல் அவர்களது நினைவாற்றலை வளர்க்கும்.
சிறுகதைகளை மாணாக்கரை வீட்டில் படிக்கச் செய்து வகுப்பில் அவற்றை கூறச் செய்வதன் மூலம் அவர்களது நினைவாற்றலை வளர்க்கலாம்.
குழந்தைகள் கதைகளைக் கூறும் கதை மாந்தரின் பேச்சை உணர்ச்சியுடன் வெளியிடும்பொழுதும், இடங்களையும் நிகழ்ச்சிகளையும் வருணிக்க மெய்ப்பாடுகளைப் பயன்படுத்தும் பொழுதும், அவர்களது நடிப்பாற்றல் வெளிப்படும். இவ்வாறு நினைவாற்றலும் நடிப்பாற்றலும் சிறந்து வளரக் கதைகளைப் பயன்படுத்துதல் சிறந்தது.

5.    கற்பனையாற்றலை வளர்த்தல்

கதைகளைப் படிக்கும்பொழுது கதை ஆசிரியரின் கற்பனை மாணாக்கர் தம் உள்ளத்தைக் கவர்கிறது. கதை மாந்தர் வேறு எப்படிச் செயல்பட்டிருக்கலாம் என்று கேட்கும்பொழுது மாணாக்கர் கற்பனையாற்றல் வெளிப்படும். சில வேளைகளில் படித்த, கேட்ட கதைகளைத் திரும்பக்கூறும்பொழுது கதை நிகழ்ச்சியை மாற்றியும், ஒரு சில சொற்களைச் சேர்த்தும் கூறுவர். இவ்வாறு உருவாவதுதான் கற்பனை, இக்கற்பனையாற்றலை வளர்க்க  ஆசிரியர் கதைகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.

6.    சொற்களஞ்சியப் பெருக்கம்

கதைகளில் வரும் நிகழ்ச்சிகளை வருணிக்கும்பொழுதும், இடங்களை வருணிக்கும் பொழுதும் புதிய சொற்கள் இடம்பெறும். மற்றும் கதை மாந்தர் வெவ்வேறு துறைகளைப் பற்றிப் போசும்பொழுதும் புதிய சொற்கள் பயன்படுத்தப்படும். இவ்விதமான கதைகளைப் படிக்கும், கேட்கும் மாணாக்கரது சொற்களஞ்சியம் பெருகும். சொற்களஞ்சியம் பெருக்குதல் ஒரு சிறப்பு நோக்கமாக அமைகிறது.

7.    நாட்டுப் பற்றினை வளர்த்தல்

நாட்டின் மீது பற்றுக்கொண்டு, அதற்காகத் தம் உடல், பொருள் உயிர் அத்தனையும் கொடுத்த வீரர் தம் வரலாற்றைப் படிக்கும்பொழுது மாணாக்கர் உள்ளத்தில் நாட்டுப்பற்று எழும். நாட்டுப் பற்றினை வளர்க்கக் கதைகள் பெருமளவு உதவும். நாடு அடிமைப்பட்டிருந்த காலத்து நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட வீரர்கள், சிறந்த இலக்கியங்களைப் படைத்துத் தந்த கவிஞர்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்த தன்னலமற்ற சமூகத் தொண்டர்கள் ஆகியோரின் வரலாறுகள் நாட்டுப் பற்றினை வளர்ப்பனவாம். மற்றும் நம்நாட்டின் இயற்கையமைப்புச் சிறப்பு, பண்பாட்டுச் சிறப்பு பற்றிக் கூறும் கதைகளும் நாட்டுப் பற்றினை வளர்ப்பனவாம். நாட்டுப் பற்றினை வளர்த்தலை ஒரு  சிறப்பு நோக்கமாகக் கொண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக