வியாழன், 11 ஏப்ரல், 2013

தொல்லை?


பசுமையைன புல்வெளி. நிரைய பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. கொக்குகள் அவற்றின் அருகே நின்று பறக்கும் பூச்சிகளை பிடித்து தின்றன.

கொக்குகள் அவ்வப்போது மாடுகளின் முதுகில் ஏறும். வாய் அருகில் செல்லும். இது மாடுகளுக்கு தொந்தரவாக இருக்கும். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பசுவிற்கு கொக்குகளின் இந்த செயல் பிடிக்க வில்லை.

ஒருநாள்  அந்த பசு கொக்குகளை கண்டித்தது. “நான் புற்களை கடிக்கும் இடத்தில் நீங்கள் நின்றுகொண்டு எனக்கு தொந்தரவு செய்யக்கூடாது” என்று எச்சரித்தது.

‘இல்லை நண்பா!, எங்களை விரட்டாதீர்கள். புற்களின் அடியில் பூச்சிகள் மறைந்துகொள்ளும் எங்களால் அவைகளை எளிதாக பிடிக்க முடியாது. ஆனால் நீங்கள் புற்களை மேயும்போது உங்கள் மூச்சுக்காற்று பட்டு புற்கள் அசையும். அப்பொழுது மறைந்திருக்கும் பூச்சிகள் அங்குமிங்கும் ஓடும். அதை நாங்கள் எளிதாகப் பிடித்து உண்டு எங்கள் பசியாற்றிக் கொள்வோம். உங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கமாட்டோம்’ என்று கொக்கு பணிவுடன் சொன்னது.

“அப்படியானால் நீங்கள் பூச்சி பிடித்து உண்ண நாங்கள் உதவணுமா? முடியவே முடியாது. எனக்கு இடையூறாக இருக்கும் எதையும் நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கடைசியாக நான் உங்கள் கொக்கு கூட்டத்தையே எச்சரிக்கிறேன். என் பக்கம் யாருமே வரக்கூடாது.  மீறி வந்தீர்களென்றால் என் கால்களால் உங்களை மிதித்து நாசம் செய்துவிடுவேன். ஜாக்கிரதை” என்று கடும் கோபத்தோடு பசு கொக்குகளை விரட்டியடிக்க, பயந்தோடியது கொக்குகள்.

 அன்றிலிருந்து அந்தப் பசு புல்மேயும் இடத்திற்கு எந்த கொக்கும் செல்லவில்லை. அந்தப் பசு ஒரு முறை தன்னுடன் மேய்ந்து கொண்டிருந்த இன்னொரு பசுவிடம், “பார்த்தாயா நண்பா, என்பக்கம் எந்த கொக்கும் வருவதில்லை. எந்த தொந்தரவும் தருவதில்லை. டென்ஷன் இல்லாமல் புல் மேய்கிறேன். உனக்கு அந்தக் கொக்குகளை விரட்ட தைரியமில்லை. அதனால்தான் உன்னிடம் அவைகள் வாலாட்டுகின்றன” என்றது.

“நீ சொல்லுவதுபோல் கொக்குகளால் எனக்கு எந்த இடைஞ்சலும் இல்ல” என்றது மற்றொரு பசு.

“சரி உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டு இந்தப் பசு மேயத் தொடங்கியது.

சில நாட்கள் கழித்து, கொக்கு நெருங்காத பசு மிகுந்த பசியுடன் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது அதன் மூக்கினுள் ஒரு விட்டில் பூச்சி நுழைந்தது. உடனே பசு மூச்சுவிட முடியாமலும் பங்கர வலியாலும் அலறித் துடித்தது.

அருகில் அமர்ந்து இரை தேடிக் கொண்டிருந்த கொக்கு ஒன்று பறந்து வந்து. ‘பசு நண்பா எதற்காக இப்படி கத்துகிறாய்’ என்றது.

‘என் மூக்கினுள் ஏதோ பூச்சி நுழைந்துவிட்டது. வலி தாங்க முடியவில்லை’ என்றது.

“கவலைப்படாதே நண்பா, கிழே படுத்துக்கொள் நான் பார்க்கிறேன்’ என்றது கொக்கு.

பசு சாய்ந்து படுத்ததும், பசுவின் மூக்கைப் பார்த்த கொக்கு, “ஒன்றுமில்லை நண்பா, பூச்சி உள்ளே தள்ளி செல்லாமல் ஓரமாகத்தான் இருக்கிறது. இதோ எடுத்துவிடுகிறேன்” என்ற கொக்கு தனது நீண்ட அலகால், மூக்கினுள் நுழைந்த பூச்சியை எடுத்து வெளியே போட்டது.

பசு வேதனை குறைந்து நிம்மதி அடைந்தது. “நண்பா உன் உதவிக்கு நன்றி. உங்களை என்னருகே சேர்க்காதபோதும், ஆபத்து என்று வந்தபோது எனக்கு உதவி செய்துவிட்டீர்கள். பூச்சிகள் எங்கள் மூக்கினுள் புகுந்துவிடக்கூடாது என்ற இயற்கை ஏற்பட்டால்தான் நீங்கள் எங்களுடன் அமர்ந்து இரை தேட அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். மீண்டும் உங்கள் இனத்தினர் என்னுடன் அமர்ந்து இரை தேட வேண்டும்” என்றது பசு.

கொக்குகளும், பசுவுடன் அமர்ந்து இரைதேட புல்வெளி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

கதையின் நீதி: எல்லாமே நன்மைக்காதான் என்று செயல் பட்டால் தீவினைகள் அதிகம் ஏற்படாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக