வியாழன், 11 ஏப்ரல், 2013

வெற்றியின் முதற்படி

“அம்மா! இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. நான் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிறேன். எனக்குத்தான் முதற்பரிசு கிடைக்கும். அதற்காகப் பல நாளாகப் பயிற்சி எடுத்து வருகிறேன்” என்றான் செந்தில்.

“மகனே! உனக்குத்தான் பரிசு. உன்னை வெல்ல எவர் இருக்கிறார்! நம்பிக்கையுடன் முயற்சிசெய்” என வாழ்த்தினார், அவன் தாய்.

எதிர்பார்த்தபடியே செந்திலுக்கு முதற்பரிசு கிடைத்தது. அவன் வெற்றிக் கோப்பையுடன் வீட்டுக்கு வந்தான். அம்மா விருந்து சமைத்துக்கொண்டு இருந்தார். தான் வெற்றி பெற்ற செய்தியை யாரோ அம்மாவிற்கு முன்னதாகவே தெரிவித்து இருக்கிறார்கள். அதனைக் கொண்டாடத்தான் அம்மா விருந்து செய்கிறார் என நினைத்தான்.

தாயை அனைத்துக் கொண்ட செந்தில், “அம்மா! நான் வெற்றி பெற்றது உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக்கேட்டான். “மகனே! நீ வெற்றி பெறுவாய் என எனக்கு உறுதியாகத் தெரியும். இந்த அட்டையைப் பார்” என்றார், அம்மா.

“மகனே! உன் வெற்றிக்கு வாழ்த்துகள். அதற்காகத்தான் இந்த விருந்து’ என அதில் எழுதியிருந்தது. குடும்பத்தினருடன் செந்தில் விருந்தை மிக மகிழ்ச்சியுடன் சுவைத்துச் சாப்பிட்டான்.

சிறிது நேரத்திற்குப்பின் அம்மா கொடுத்த அந்த அட்டையைச் செந்தில் கையில் எடுத்தான்; பின்பக்கமும் ஏதோ எழுதி இருப்பதுபோலத் தெரிந்தது; திருப்பிப் பார்த்தான்.

அதில், ‘அன்பு மகனே! தோல்வி, வெற்றி  இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்கவேண்டும். வெற்றி ஏற்பட்டுவிட்டது என்று தற்பெருமைக்கொள்ளக்கூடாது தோல்வி ஏற்பட்டுவிட்டது என்பதற்காக மனம் உடைந்துபோகக் கூடாது.
வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் மனிதருக்கு அடிக்கடி நடக்கக் கூடிய சம்பவங்கள். ஆகையால் முயற்சி செய் பலனை அதிகம் எதிர்பார்காதே. நம்பிக்கையோடு இரு. என்று எழுதப்பட்டு இருந்தது. செந்தில் மகிழ்ச்சியோடு தன் அம்மாவைப் திரும்பிப் பார்த்தான்.

தன் அம்மாவின் கருத்தை பள்ளிக்கு போனதும் தன் சக நண்பர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று நினைத்து தனது சட்டைப் பையில் அந்த அட்டையைப் போட்டுக் கொண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக