செவ்வாய், 2 ஏப்ரல், 2013

மான்மகன்

அந்தநாட்டின் அரசன் ஒரு ஜோதிடப் பைத்தியம். ஒரு சிறிய செயலைச் செய்ய வேண்டுமென்றாலும் சோதிடர்களை அழைத்துக் கருத்துக்கேட்டு, நாள் நட்சத்திரம் பார்த்தே செய்வான். இதனால் அரசனை ஏய்த்துப் பிழைப்பதற்கென்றே ஒரு போலி சோதிடக் கும்பல் நாட்டில் உருவாகி விட்டது.

அரசனின் மனைவியாகிய அரசியோ சோதிடத்தை அறவே வெறுப்பாள். தன்னம்பிக்கையும் பகுத்தறிவும் கொண்டவள். இதனால் அரசனுக்கும் அரசிக்குமிடையே பலத்த கருத்து வேறுபாடுகள் தோன்றின.

அரசி கருவுற்றிருந்த சூழ்நிலையில் ஒருநாள் ஒரு புதிய சோதிடன் தலைநகருக்கு வந்துசேர்ந்தான். அவன் ஒரு தீய நோக்கத்தோடுதான் அந்த நாட்டிற்கு வந்திருந்தான்.

அரசி அவளுடைய தந்தையின் நாட்டில் இளவரசியாக இருந்த காலத்தில் இந்தச் சோதிடனை அரசவையில் இருந்து துரத்தி அடித்திருந்தாள். அதற்கு வஞ்சம் தீர்க்கத்தான் இந்தச் சோதிடன் இப்போது இந்த நாட்டிற்கு வந்திருந்தான்.

தன்னைப் புகழ்பெற்ற சோதிடனாக அரசனுக்கு காட்டிக் கொண்ட அவன், அரசன் மனம் மகிழும் வண்ணம் பல போலிச் சோதிடக் கணிப்புகளை எடுத்துக் கூறினான். பிறகு இறுதியில்,

“அரசே! ஒரு வருத்தமான கணிப்பை உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நான் இருக்கிறேன்... அரசியாருக்கு பிறக்கப் போகும் குழந்தையால் உங்களுக்கு உயிராபத்து நேரிடும் என்று கிரகங்களின் நிலை காட்டுகிறது.

எனவே தாங்கள் உயிர் பிழைத்து நீண்ட நாட்கள் இந்த நாட்டை ஆள வேண்டு மென்றால் கருவுற்றிருக்கும் அரசியாரைக் காட்டுக்குள் துரத்தி விடுங்கள். அப்போதுதான் உங்கள் பிள்ளையால் உங்களுக்கு வரவிருக்கும் உயிராபத்து நீங்கும்” என்று இரக்கமின்றி பொய் கூறினான்.

ஏற்கனவே அரசியோடு கருத்து வேறுபாடு கொண்டிருந்த அரசன் சோதிடனின் பொய்யை அப்படியே நம்பினான். மறுநாள் அமைச்சர்களும் அறிஞர் பெருமக்களும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காத அரசன் அரசியைக் காட்டுக்குள் துரத்தி அடித்து விட்டான்.

நிறைமாதத்தில் இருந்த அரசி தனக்கு ஏற்பட்ட இந்தத் துன்பத்தை எண்ணி வருந்தி அழுதபடியே காட்டுக்குள் மனம் போனபடி நடந்து சென்றாள். இறுதியில் மேற்கொண்டு நடக்க முடியாமல் ஒரு மரத்தடியில் மயங்கிச் சாய்ந்தாள்.

அரசி மயக்கதில் இருக்கும்போதே அவளுக்கு ஒர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை பிசியால் துடித்துக் கதறி அழுதது. பாலூட்ட வேண்டிய அன்னையோ மயங்கி கிடந்தாள்.

குழந்தையின் அழுகுரல் காடெங்கும் எதிரொலித்தது. அப்போது தன் குட்டியை இழந்திருந்த ஒரு பெண்மான் அங்கே ஓடிவந்தது. அழும் குழந்தையைத் தாயன்போடு நக்கிக் கொடுத்த அந்த மான் குழந்தையின் வாயிலே பாலைச் சொரிந்தது.

பாலை அருந்திப் பசியாறிய குழந்தை மகிழ்ச்சியாய்ப் புன்னகை செய்தது. மானைப் பார்த்துக் கை, கால்களை ஆட்டி விளையாடத் தொடங்கியது.

அந்த மானைப் பிடிப்பதற்காக ஒரு வேடன் பதுங்கிப் பதுங்கி அதன் பின்னே வந்திருந்தான். அவன் ஒளிந்திருந்து நடப்பதைக் கவனித்தான். மான் குழந்தைக்குப் பாலூட்டிய அரிய காட்சியைக் கண்ட அவன் பெரிதும் வியப்படைந்தான்.

மன நெகிழ்ச்சியடைந்த அவன் கையிலிருந்த வில்லையும் அம்பையும் வீசி எறிந்தான். தன்னுடைய குடியிருப்புக்கு வேகமாக ஓடிச் சென்றான். உதவிக்கு பெண்களையும், ஆண்களையும் அழைத்துக் கொண்டு, “அரசியும்”, “குழந்தையும்” இருந்த மரத்தடிக்கு விரைந்து வந்தான்.

அதுவரை குழந்தைக்கு காவலாய் இருந்த மான் வேடர் கூட்டத்தைக் கண்டதும் ஓடி மறைந்தது.

வேடரினப் பெண்கள் அரசிக்கு மருந்துவம் பார்த்து அவளது மயக்கத்தைத் தெளிவித்தார்கள். பிறகு அரசியையும் குழந்தையையும் தங்கள் குடியிருப்புக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்.

அரசியின் கதையைக் கேட்டறிந்த வேடர்கள் அவள் தங்களுடன் எத்தனைக் காலம் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்றும் அவளுக்கும் குழைந்தைக்கும் பாதுகாப்பாகத் தாங்கள் எப்போதும் இருப்பதாகவும் கூறினார்கள். அரசி நெகிழ்ந்து போய் அவர்களுக்கு நன்றி கூறினாள்.

மறுநாள் குழந்தை பசியால் வீறிட்டழுதது. வாரி மார்போடு குழந்தையை அணைத்துக் கொண்ட அரசியும் மனம் வருந்தி அழுதாள். ஏனென்றால் குழந்தைக்கு பாலூட்ட அவளிடம் பால் சுர்க்கவில்லை.

அப்போது எங்கிருந்தோ ஓடி வந்தது அந்தப் பெண்மான். அழும் குழந்தையின் வாயில் அமுதெனப் பாலைச் சொரிந்துவிட்டு ஓடிவிட்டது.

இந்த அரிய காட்சியை வேடர்களும், அரசியும் வியப்போடு பார்த்து மகிழ்ந்தார்கள்.

பிறகு நாள்தோறும் அந்தமான் தவறாது வந்து குழந்தைக்கு பாலூட்டிச் சென்றது. வேடர்களும் அந்த மானுக்கு எந்தத் தீங்கும் நேரிடாதபடி பார்த்துக் கொண்டார்கள். குழந்தை பால்குடி மறக்கும் வரை அந்த மான் குழந்தைக்குப் பாலூட்டி வந்தது.

தன் மகனை ஒரு மான் பாலூட்டி வளர்த்ததால் அரசி அவனுக்கு மான்மகன் என்று பெயரிட்டாள்.

மான்மகன் பால்குடியை மறந்த பிறகும் கூட நாள்தோறும்  அந்த மான் வந்து அவனோடு விளையாடிவிட்டுச் செல்லும். மான்மகனும் அந்த மான்மீது மிகவும் அன்பு கொண்டு வளர்ந்தான்.

இதற்கிடையில் ஒரு போலி சோதிடனின் வஞ்சகத்தால் அரசன் அரசியைத் துரத்தியடித்ததைக் கேள்விப்பட்ட சில நல்ல சோதிடர்கள் அரசனிடம் சென்று உண்மையை விளக்கினார்கள்.

வெகுண்டெழுந்த அரசன் அந்த போலிச் சோதிடனை தேடிப் பிடித்து விசாரித்து அவனுக்கு மரண தண்டனை விதித்தான். பிறகு வீரர்களை காட்டுக்குள் அனுப்பி அரசியைத் தேடிக் கண்டு பிடிக்க ஆணையிட்டான்.

வீரர்கள் தேடிக் கொண்டு வந்தபோது அரசி தன் மகனோடு காட்டிற்குள் நெடுந்தொலைவில் இருக்கும் வேடர் குடியிருப்புக்கு வந்து விட்டிருந்தாள்.

அரசியை கொண்டு வந்து விட்ட இடத்தருகில் தேடிப் பார்த்த வீரர்கள் அரசியை கண்டு பிடிக்க முடியவில்லை என்று அரசனிடம் சொன்னார்கள். அரசி காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

அரசன் மனமொடிந்து போனான். அன்று முதல் அரசன் எதற்கெடுத்தாலும் சோதிடம் பார்க்கும் பழக்கத்தை விட்டொழித்தான். போலி சோதிடர்களை நாட்டை விட்டு துரத்தியடித்தான்.

அரசி, மற்றும் குழந்தையின் நினைவாகவே இருந்து கவலையுடன் நாட்களைக் கழிக்கத் தொடங்கினான். காலம் ஓடியது.

இங்கே மான்மகன் வளர்ந்து இளைஞனாகியிருந்தான். வேடர்களிடமிருந்து போர்களையை நன்கு கற்றுத் தேறியிருந்தான். மான்பால் குடித்து வளர்ந்த அவன் எல்லா விலங்குகள் மேலும் அன்பு செலுத்தினான். அதனால் அவன் எந்த ஒரு விலங்கையும் வேட்டையாடுவதில்லை. இறைச்சியையும் உண்பதில்லை.

விறகு வெட்டி அதைக் காட்டின் அந்தப்பக்கம் இருக்கும் ஊர்களுக்கு கொண்டுபோய் விற்று தன் அன்னையைக் காப்பாற்றிவந்தான்.

தனக்கு பால் புகட்டிக் காப்பாற்றிய மானைத் தன் குடிசையிலேயே வைத்துக் கொண்டாண் மான்மகன். அந்த மான் பகலெல்லாம் காட்டுக்குள் திரிந்து விட்டு மாலையானதும் மான்மகனின் குடிசைக்கு வந்து விடும்.

அங்கே அரண்மனையின் மிகுந்த மனச்சோர்வுற்று இருந்த அரசன் ஒருநாள் வேட்டைக்கு தனியாகக் கிளம்பினான். அரசன் காட்டுக்குள் ஙுழைந்து வந்தபோது இந்த மான் அவன் கண்ணில் பட்டது. உடனே அரசன் மானை குதிரையில் துரத்தினான்.

மான் உயிரைக் காத்துக் கொள்ள விரைந்து ஓடியது. மானைக் குறி வைத்து அம்பு எய்தான் அரசன். அம்பு மானைக் காயப்படுத்தியதே தவிர கொல்லவில்லை.

உடலில் பாய்ந்திருந்த அம்போடு மான் காட்டுக்குள் ஓடி மறைந்தது. அரசனும் அதைவிடாதுத் தேடிச் சென்றான்.

காயம்பட்ட மான் காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருந்த மான்மகனிடம் சென்று அடைக்கலம் புகுந்தது. காயம் பட்டு வந்து நிற்கும் மானைக்கண்டு பதறிதுடித்த மான்மகன் அம்பை உருவி எடுத்து விட்டுப் பச்சிலைகளைப் பறித்து மானின் காயத்தில் வைத்துக் கட்டினான்.

அப்போது அரசன் அங்கே வந்து  சேர்ந்தான். “ஏய் விறகு வெட்டியே! அந்த மானின் மீது அம்பு எய்தவன் நான். எனவே அந்த மான் எனக்குச் சொந்தம். அதை என்னிடம் ஒப்படைத்து விடு!” என்று மிரட்டினான் அரசன்.

“இந்த மான் நான் என் வீட்டில் வைத்து வளர்க்கும் மான்! இது என் உடைமை. இந்த மான் மீது அம்பெய்ததற்காக நான் உங்களைக் கொல்லாமல் விட்டதே பெரிது! ஆகவே உடனே இங்கிருந்து அகன்று விடுங்கள்.” என்று களங்காமல் விடையளித்தான் மான்மகன்.

“என்ன ஆணவம் உணக்கு!? நான் இந்த நாட்டின் அரசன். இந்த காடும் இதில் உள்ள மரங்கள் பறவைகள், விலங்குகள் அனைத்தும் என்னுடையவை! எனவே மானை என்னிடம் கொடுத்துவிட்டு உயிர் பிழைத்து செல்” என்று உறுமினான் அரசன்.

மான்மகன் சிரித்தான். “நீங்கள் அரசராய் இருந்தால் எனக்கென்ன வந்தது? இந்த மான் நான் குழந்தையாயிருந்த போதிலிருந்து  எனக்கு பாலூட்டிவளர்த்த மான். எனவே இந்த மான் எனக்குதாய் போல என் தாய்க்கு உரிமை கொண்டாட நீங்கள் யார்? முடிந்தால் என்னுடன் போரிட்டு வென்று இந்த மானை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அறைகூவல் விடுத்தான் மான்மகன்.

சினம் கொண்ட அரசன் வாளை உருவிக்கொண்டு குதிரையிலிருந்து குதித்தான். மான்மகனை நோக்கிப் பாய்ந்தான. மான்மகனும் தன் வாளை எடுத்துக்கொண்டு பாய்ந்தான். இருவரும் கடுமையாக மோதினார்கள்.

வயதாகி விட்ட படியால் அரசனால் மான்மகனின் வாள் வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. விரைவிலேயே அரசன் களைத்துப் போனான். இறுதியில் கையிலிருந்த வாள் பறந்து செல்ல அரசன் தடுமாறிக் கிழே விழுந்தான்.

அரசனின் நெஞ்சுக்கு நேரே தன் வாளை நீட்டி வெற்றிச் சிறிப்பு சிரித்தான் மான்மகன். அப்போது அரசன் மான்மகனின் கைவிரலிலிருந்த தன்னுடைய முத்திரை மோதிரத்தைக் கண்டு திடுக்கிட்டான்.  அது அரசன் அரசிக்கு அணிவித்திருந்த மோதிரம். அதை அரசி மான்மகனின் விரலிலே அணிவித்திருந்தாள்.

“தம்பி! என் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன்...நீ அணிந்திருக்கும் இந்த மோதிரம் உனக்கு எப்படிக் கிடைத்தது என்று சொல்வாயா?” என்று பதட்டத்தோடு கேட்டான் அரசன்.

வாளை உறையில் போட்ட மான்மகன் அரசனைத்தூக்கி விட்டான். “மன்னிக்க வேண்டும் அரசே! என் உயிரைக்கூடக் கொடுப்பேன் ஆனால் அந்த மானை மட்டும் யாருக்கும் தரமாட்டேன்” என்று கூறிவிட்டுப் பின்னர் தான் காட்டுக்குள் பிறந்து மான்பால் குடித்து வளர்ந்த கதையைத் தெரிவித்தான். அந்த மோதிரத்தை அன்னையினுடையது என்றும் தெரிவித்தான்.

அரசி மான்மகனுக்கு அவனுடைய தந்தை கைவிட்டு விட்டுச் சென்று விட்டார் என்று கூறியிருந்தாளே தவிர, இந்த நாட்டின் அரசன் அவன் தந்தை என்ற உண்மையைக் கூறியிருக்கவில்லை.

மான்மகனின் கதையைக் கேட்ட அரசன் கண்ணீர் பொங்கி வர “மகனே!” என்று கதறி அவனை அனைத்துக் கொண்டான். மான்மகனுக்கு ஒன்றுமே புரியாது திகைத்து நின்றான்.

அப்போது மகனுக்கு உணவு எடுத்துக் கொண்டு அங்கே வந்த அரசி அரசனைக் கண்டாள்... அரசனும் அவளைக் கண்டான்...

பிறகென்ன? பிரிந்தவர்கள் ஒன்று கூடினார்கள். வேடர்கள் மனம் மகிழ்ந்தார்கள், அரசன் தன் மனைவியையும் மகனையும் முறைப்படி அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

இப்போது அந்தமான் அரண்மனைப் பூங்காவில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக