ஞாயிறு, 10 மார்ச், 2013

நம்பிக்கை

காலாண்டு விடுமுறை முடிந்து அன்று தான் பள்ளி வேலைநாள் ஆரம்பமானது. காலைப் பிரார்த்தனை முடிந்ததும், புதிதாய் வந்த ஆசிரியர் ஒருவரை அறிமுகப்படுத்தினர் தலைமை ஆசிரியர். அவர்தான் தமிழாசிரியர் அன்பரசன். எதையுமே புதிய கோணத்தில் பார்பவர், அன்பானவர். தலைமையாசிரியவர் அவரை ஆறாம் வகுப்புக்கு வகுப்பாசிரியராக நியமித்தார்.

முதல் பாடவேளை. புது ஆசிரியரைக் கண்டவுடன் மாணவர்கள் சற்று கலவரத்துடன் காணப்பட்டனர்.

“மாணவர்களே! இன்று முதல் நாள் என்பதால் உங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த முதல் மாணவனைத் தொடர்ந்து அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் மாணவர்களின் படிப்புநிலை பற்றி கேட்டார்.

வகுப்புத் தலைவன் மணி எழுந்து, “சார், அபி பர்ஸ்ட்ரேங்க், சரண்யா செகண்ட் ரேங்க், செல்வம் தேர்டு ரேங்க்” என்று தொடர்ந்து பத்து ரேங்க் வரை சொல்லி முடித்தான். 

பத்து பேரும் எழுந்து நின்றனர். அவர்களைக் கவனித்து விட்டு அமரச் சொய்த ஆசிரியர், “ஒழுங்காக படிக்காதவர்கள் எத்தனை பேர்?” என்றதும், அனைவரும் கடைசி பொஞ்சை சுட்டிக்காட்டினர்.

“அறிவு மட்டும் சுத்தமாக படிக்கமாட்டான் சார். எப்பவும் நல்லா ஊர் சுத்துவான்” என்று சத்தம்க கூறினான் ஒரு மாணவன்.

அறிவை எழுந்து நிற்கச் சொன்னார் ஆசிரியர். கடைசி பெஞ்ச்சில் இருந்து எழுந்து நின்றான் அறிவு. பார்பதற்கு சற்று உயரமாகத் தெரிந்தான்.

“மாணவர்களே! இனி இந்த வகுப்புக்கு இவன் தான் லீடர். இவன் சொல்படிதான் அனைவரும் கேட்க வேண்டும்” என்று ஆசிரியர் கூறிய அடுத்த நொடி, வகுப்பே சிரிப்பிலையில் மூழ்கியது. அவனைத் தவிர அனைவரும் சிரித்ததால் தலை கவிழ்ந்து நின்றான் அறிவு.

“அமைதி...அமைதி... ஏன் சிரிக்கிறீர்கள்? இந்த வகுப்பை வழி நடத்தும் அத்தனைத் திறமையும் அவனிடம் இருக்கிறது. அவனால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
என்று ஆசிரியர் கூறவும், மணி அடிக்கவும் சரியாக இருந்தது. அன்றைய பாடவேளை முடிந்து.

புதிதாக வந்த ஆசிரியர் அவ்வாறு கூறியவுடன் அன்று முழுவதும் மிகுந்த குழப்பத்துடன் காணப்பட்டான் அறிவு. வழக்கமாகச் சேரும் மாணவர்களுடன் சேராமல் தனியே இருந்தான்.

மறுநாள் காலை பள்ளி வழக்கம் போல் ஆரம்பித்தது. ஆனால், அறிவு மட்டும் வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டான். ஆம், தினமும் தாமதமாக வந்து உடற்கல்வி ஆசிரியரிடம் திட்டு வாங்குவான், இன்று 8.30 மணிக்கே வந்து விட்டான்.


இந்தச் செய்தி, ஆசிரியர் அன்பரசனின் காதுக்கு எட்டியது. தன்னுடைய முயற்சியில் முதல் படியைக் கடந்து விட்டதை எண்ணி மகிழ்ந்தார். அன்று முதல் ஒழுக்கமான மாணவனாக திகழ்ந்தான் அறிவு.

நாட்கள் கடந்தன. இரண்டாம் இடைப்பருவத் தேர்வு வந்தது. அறிவு மிகவும் கஷ்டப்பட்டு படித்தான். இதுவரையிலும் படிப்பு பற்றி கவலையே படாதவன், முதல் முறையாக படிக்க எண்ணினான். ஆனால், எல்லாமே அவனுக்கு புதிதாகத் தெரிந்தது. ஒன்றுமே புரியவில்லை. எனவே, ஆசிரியர்களிடம் தனியாகச் சென்று சந்தேகம் கேட்டான். அவனின் இந்த செய்கை மற்ற ஆசிரியர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. அவர்களும் அவனுக்கு ஒத்துழைத்து, புரியாத பாடங்களை புரிய வைத்தனர்.


இரண்டாம் இடைப்பருவத் தேர்வு முடிவு வந்தது. இதுவரையில் ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறாத அறிவு, முதல் முறையாக மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆங்கிலம், கணக்கில் மட்டும் தோல்வியடந்தான். இவனின் வெற்றிக்கு காரணமான வகுப்பாசிரியர் அன்பரசனை அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர். தொடர்ந்து அவன் முன்னேறுவான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக